ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!


இந்த எழவெடுத்த சமூக ஊடகம் விசித்திரம் நிறைந்த பல பதிவுகளை சந்தித்து இருக்கிறது. பல வில்லங்கமான கமெண்ட்களையும் சந்தித்து இருக்கிறது.
ஆனால் இந்த பதிவு ஒன்றும் விசித்திரமானது அல்ல. நானும் ஒன்றும் புதுமையான ப்லாக்கருமல்ல..

வாழ்க்கை மேடுபள்ளத்தில் சர்வ சாதாரணமாக விழுந்து வாறும் சக ஜீவன் தான் நான்.


பதினெட்டு இட்லியை முழிங்கினேன். சாப்பாடை ரவுண்ட் கட்டினேன், இப்படி எல்லாம் நான் குற்றம் சாட்டபட்டிருக்கிறேன்.



நீங்கள் எதிர்ப்பார்ப்பீகள், இதை எல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று..
இதை எல்லாம் நான் ங்கொப்புரான இல்லை என்று மறுக்கப்போவது இல்லை

பதினெட்டு இட்லியை சாத்தினேன், மூன்று வகை சட்னிக்காக அல்ல, இட்லி மாவு புளித்திருக்கிறதா என கண்டுபிடிக்க..

தோசையை ரவுண்ட் கட்டினேன், தோசை மொறு மொறுப்பாக இருந்ததற்க்காக அல்ல, மாவு மீந்து போய் ஃப்ரிஜில் வைக்க இடம் இல்லை என்பதற்காக..

உனக்கேன் இவ்வளவு அக்கறை, வீட்டில் உள்ள மற்ற ஜீவன்களூக்கு இல்லாத அக்கறை?
நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன். 

சுயநலமென்பீர்கள், என் சுயநலத்தில் துக்கணூண்டு பொதுநலமும் கலந்துருக்கிறது.
ஆகாரத்திற்க்காக, கார்த்திகைவிரதம் முடித்து வைக்கபடும் சோறை திங்கிறதே அண்டங்க்காக்கை, அது போல..

என்னை என் வீட்டுக்காரம்மா குற்றவாளீ என்கிறார்களே..இந்த குற்றவாளீயின் வாழ்க்கைபாதையை கொஞ்ச தூரம் பின்னோக்கி பார்க்க கொசுவர்த்தி சுற்றி பார்த்தால்,
அவன் கடந்து வந்த கையேந்தி பவன்கள் எவ்வளவு என கணக்கு பார்க்க முடியும்.

மணமணக்கும் பிரியாணி இல்லை என் பாதையில்..காய்ந்து போன பரோட்டாக்களே நிறைந்திருக்கின்றன. 
மட்டன் பீஸை தீண்டியதில்லை நான், ஆனால்  பீஸ் இல்லாத குஸ்க்காவை குமுறி இருக்கிறேன்..

ஆட்டுக்கால் பாயா  சாப்பிட்டதில்லை நான், ஆனால்  ஆயா கையால் சாயா குடித்து இருக்கிறேன்…

கேளுங்கள் என் கதையை, தீர்ப்பு எழுதுவதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள் சோஷியல் நெட் ஒர்க் ஞாயம்மாரே…

தமிழ்நாட்டிலே தஞ்சாவூரில் பெரியாஸ்பத்திரியில் பிறந்தவன் நான்..
பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர், தமிழ்நாட்டின் தலைவிதிக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா
மாயவரம்..என் உயிரை வளர்த்தது. மன்னம்பந்தல் சேகர் மெஸ்..என் வயிறை வளர்த்தது. உயர்ந்தவனாக்கியது.

நலம் விசாரிக்க என் தாய்மாமனை காணவந்தேன். என்னை தின்னிபண்டாரம் ஆக்கி என்னை குற்றவாளி கூண்டில் நிற்க வைத்திருக்காளே.. இதோ இந்த ஜாலக்காரி வள்ளீ.. இவள் தக்காளி கொஸ்துவில் மயங்கினேன்.

அன்லிமிடட் மீல்ஸ் அடித்தேன். காலேஜ்க்கு போக வழி மறந்தேன். சிக்கன் குழம்பை சிதறடித்தேன்.

தாய்மாமன் பொண்ணை கண்டேன். மாமன் பொண்ணு பெயரோ வள்ளீ. மங்களமான பெயர். ஆனால் கன்னத்தில் மரு இருந்த அளவு கூட கருணை இல்லை.
என்னை குற்றவாளியாக்கி நிற்க்கிறாளே, இந்த மோசக்காரி வள்ளீ…தொடர்ச்சியாக மட்டன் பிரியாணி செய்து என்னை மட்டையாக்கி விட்டாள்..அதை நான் தடுத்திறாவிட்டாள், அப்போதே நான் வெடித்து செதறி இருப்பேன்.

தம்கட்டி சாப்பிடும் என் தனித்திறமையினால் என்னை தர்ப்பூசணியாக்கிவிட்டாள்.

வசந்த பவனில் பர்ஸை தடவி கொண்டே, ரெண்டு இட்லியும் ஒரு வடையும் சாப்பிட்டவனை மூன்று முறை சாம்பார், ரெண்டு முறை ரசம் என சாப்பிட வைத்தது யார் குற்றம்..

பிய்ந்துப்போன ப்ரட்டை கூட பிஸ்ஸா போல் எண்ணி சாப்பிட்ட இந்த அப்பாவியின் குற்றமா? தினமும், போண்டா பஜ்ஜி செய்து என்னை கோதுமை மூட்டையாக்கின வீட்டம்மாவின் குற்றமா?

புலி பசித்தாலும் புளிசோறு திங்காது என்ற கொள்கையுடன் வாழ்ந்த என் குற்றமா,
ரவா உப்புமாவில் கேரட்டை தூவி, அதை கிச்சடி என பொய் சொல்லி என் வாயில் திணித்த வீட்டம்மாவின் குற்றமா?

எட்டுதோசையோடு எழப்போகும் போது, எழ முடியாமல் செய்தது என் குற்றமா?
கூட்டுதொகை எட்டு குடும்பத்துக்காவது என பத்தாக தோசை போட்டு எழ முடியாமல் செய்த வீட்டம்மா குற்றமா?

ஆடும் பிள்ளையாய் , ஓடும் பிள்ளையாய் , வளர்ந்த என்னை இன்று ஒட்ஸ் கஞ்சியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாள் இந்த சண்டாளி....

நான் கொஞ்சம் உஷாராய் இருந்திருந்தால், யாருக்கும் தெரியாமல் பாக்கெட்டில் எப்போதும் கடலை மிட்டாய் வைத்து நொறுக்குதீனியாய் தின்று இருக்கலாம்..

அதை தானா விரும்புகிறது இந்த சமூக ஊடக நீதி மன்றம்?

பயந்து ஓடினான்.. ஆப்பமும், பாயாவும் அவனை விரட்டியது..
மீண்டும் ஓடினான், மிளகாய் பஜ்ஜி, புதினா சட்னியோடு அவனை மிரட்டியது..
ஓடினான், ஓடினான்..ஜிம்மின் வாசலுக்கே ஓடினான்..

அந்த ஓட்டத்தை தடுத்து இருக்க வேண்டும், அவன் வெயிட் வாட்டத்தை போக்கிருக்க வேண்டும்..

விட்டார்களா..வாழவிட்டார்களா? போகும் வழியில் பசிக்குமே என போண்டா கட்டி கொடுத்தார்கள்..

இந்த குடும்ப அக்கிரமங்கள் களையபடும் வரை, கட்டதொரைகளும், தோட்டாக்களும், பரிசல்காரன்களும் குறைய போவதில்லை..

இதுதான் என் வாழ்க்கை ஏட்டில் எந்த பக்கம் புரட்டினாலும் காணப்படும், பாடம், பகுத்தறிவு, பயணுள்ள அரசியல் தத்துவம்..

பெரியோரே..ஞாயம்மாரே..

வயிறையும் வாயையும் கட்டுங்கள், இல்லை சமைக்கவே வராத பொண்ணையாச்சும் கட்டுங்கள்..

எனக்கு ஒரு நியாயம் பெற்று தாருங்கள்..

ஓட்ஸ் கஞ்சியின் பிடியின் கதறும் கட்டதொர.! 

Comments

  1. ஹாஹாஹா செம பதிவு :) ROFLMAX :)))))))

    ReplyDelete
  2. super maams..i can undertand the peelings of feelings! - @japan_raghu

    ReplyDelete
  3. எகத்தாளத்தின் எக்காளம்!
    ஏக அமர்க்களம்!

    ReplyDelete
  4. அவன் வெயிட் வாட்டத்தை போக்கிருக்க வேண்டும்..

    விட்டார்களா..வாழவிட்டார்களா? போகும் வழியில் பசிக்குமே என போண்டா கட்டி கொடுத்தார்கள்..Sema

    ReplyDelete
  5. விபுசி ஹஹஹஹா :))

    ReplyDelete
  6. aருமை! கொஞ்சம் "பராசக்தி" சிவாஜி வாசனையோடு :)

    ReplyDelete
  7. நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளர்களால் மட்டுமே இப்படி எழுத முடியும், ரசித்தேன் !

    ReplyDelete
  8. நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளர்களால் மட்டுமே இப்படி எழுத முடியும், ரசித்தேன் !

    ReplyDelete
  9. அருமை நண்பரே... கடைசிவரை சரியாக கொண்டு சென்றீர்கள்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
    நண்பரே நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தர அன்புடன் அழைக்கிறேன்.

    நட்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

லோக்கல் பாய்! நீயெல்லாம் ஒரு நண்பனா?